சனி, ஜூலை 07, 2012

கடவுளை வெளியே தேடியதின் விளைவு நித்தியானந்தா...


நித்தியானந்த ஒரு சாதாரணமான மனிதர் அவரை பற்றி பேச ஒன்றுமில்லை என்று விட்டுவிடலாம், ஆனால் நித்தியானந்த ஒரு சாமியார் என்கின்ற போர்வையில் ஆன்மீகத்தை கொலைசெய்து அந்த சடலத்தின் மீது பெரிய தனது சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். ஆன்மீகத்தை காம கண்கொண்டு பார்பதான அத்தனை நாடகங்களும் நமது கடவுள் பக்தியின் மீது வைக்கப்படும் மலர்வளையம். முன்பு விவேகனந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், வள்ளலார் போன்ற பல மகான்கள் இன்று இல்லாவிட்டாலும் அவர்கள் சொன்ன கருத்துக்களை வாழ்க்கை வழிமுறைகளை கடைபிடித்தோமானால் நமது வாழ்க்கை சிறக்கும். வெற்று மனிதனை உயரத்தில் அமரசெய்துவிட்டு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவதிப்படுவது ஆன்மீகமல்ல அது வெறும் ஆணவம் "பசுதோல் போர்த்திய புலி" என்பதாகும். நித்தியானந்தாவை வளர்த்தது உண்மையில் நாம்தான் என்பதை சற்று புத்தியுள்ளவர்கள் யோசிக்கவேண்டும். கூடபிறந்தவனையே நம்பாத நாம் வெறும் சித்து வேலைகளை செய்து தனது வார்த்தை ஜாலத்தை காட்டி மயக்கிவிட்டால் அவனது காலடியில் கோடிகளை கொட்டுவதோடு, கற்பையும் இலக்க சம்மதிக்கும் கேடுகெட்ட புத்திக்கு பெயர் ஆன்மீகமல்ல. மனஅரிப்பின் துவக்கமே ஆன்மீகம் அது உடலரிப்பிட்கான வேட்கையல்ல. மனமே திரைகடலாய் உடலே அதன் அலையாய் அலைந்து திரிந்து அவனை அடைவதே ஆன்மீகம். அதைவிட்டு ஒரு சாமியார் தன்னை கடவுள் என்பாராம் அதை நம்பி அவரோடு உறவு கொள்வார்களாம் உடனே அவர்களுக்கு மோட்சதிற்கான டிக்கெட் வழங்கப்படுமாம். பலருக்கு தெரிவதே இல்லை அவர் ப்ளாக்கில் விற்கும் அந்த டிக்கெட் நரகத்திற்கான டிக்கெட் என்பது. பார்க்க அமைதியாக இருந்தால் அவர் நல்லவர் அவர் செய்வதெல்லாம் சரி என்று நம்பும் முட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை ஆயிரம் பெரியார் அவதரித்தாலும் வேஸ்டுதான். 

மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. தன்னை கடவுள் என்று எந்த கடவுளும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாது. கடவுள் என்பது வேறு மனிதன் என்பது வேறு. நாம் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தானா ? என்பதே சந்தேகம் எழும்போது அதாவது முதல்கட்டமே முழுமையடையாதபோது கடைசி கட்டத்தை அடைந்துவிட்டதாக தன்னை பிரகடனப்படுதிக்கொண்டவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணராமல் அவர்களை தேடி செல்பவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பது சொல்லியா தெரியவேண்டும். மனதுள் இருக்கும் கடவுளை எங்கு தேடி கண்டுபிடிக்கப்போகிறார்கள், மனம் அலைபாய்ந்தால் மௌனம் பிறக்காது அங்கு அமைதியும் கிடைக்காது. மனம் அமைதியானால் ஞானம் பிறக்கும், கடவுள் தெரிவார் அந்த அமைதியில். ஒருமுறை இறைவன் தனக்கே உரிய ஒரு இடம் தேடி அலைந்தார் அவர் எங்கு சென்றாலும் மனிதர்கள் அவரை தொந்தரவு செய்தார்கள் அவரோ யாரும் தன்னை கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்திற்கு செல்ல நினைத்தார் அதனால் மனிதனின் மனதுள் சென்று அமர்துவிட்டார். எங்கெங்கோ அலைந்த மனிதர்கள் கடவுளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு வழியின்றி தாங்களே தங்கள் கடவுளை உருவமாக்கி தனக்குள் இருக்கும் கடவுளை வெளியில் தேட ஆரம்பித்தார்கள் அந்த தேடுதலின் உச்சகட்டம்தான் தன்னை கடவுள் என்று பிறரை நம்ப வைப்பது பிறகு அவர்களை முழுவதுமாய் ஆக்கிரமித்து அவர்களது சுயத்தை அழித்து தானே கடவுள் என்கின்ற தர்க்கத்தை கொண்டுவருவது.
நித்தியானந்தா மட்டும் தவறு செய்யவில்லை அடிப்படையில் மனித மனதின் மொத்த உருவம் நித்தியானந்த. மனிதர்கள் மற்றவர்கள் தாங்கள் ஆசைபடும் நிலையை நித்தியானந்தா அடைந்துவிட்டார் என்கின்ற பொறாமைதான் பலர் நித்தியானந்தாவை வெறுக்க காரணம்.அது தேவைக்கு அதிகமான பணம், தேவைக்கு அதிகமான பெண்களிடம் உறவு, மற்றவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து தான் விருப்பதிற்கு அவர்களை ஆடவிடுவது என்கின்ற போதை எல்லோருக்குமே தேவை அதை வெற்றிகரமாக நித்தியானந்த நிறைவேற்றிவிட்டார். அடிப்படையில் ஒன்று யோசிக்க மறந்துவிட்டோம் அது எல்லோரும் நிதியானந்தாவாக ஆகா ஆசைப்படுவது அது நடக்காதபோது அவரை வெறுப்பது என்கின்ற ரீதியில் நடந்தவைதான் என்பதே உண்மை.இதை புரிந்துகொண்டால் தவறு நித்தியானந்தவிடம் மட்டும் இல்லை என்பதும் புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக