வெள்ளி, ஜூலை 27, 2012

பொறுப்பில்லாத நிர்வாகத்தால் ஏற்பட்ட மரணம்...


பணம் ஒன்றே வாழ்கையின் முக்கிய குறிக்கோளாய் வாழும் காலம் வந்தபின்பு, தன் குடும்பம் என்பதை தாண்டி பலர்  யோசிப்பதே இல்லை. தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் துடிக்கும் மனம் அடுத்தவர் என்றால் அதே மனம் கல்லாய் மாறும் சுபாவம் கேவலத்திலும் கேவலம். வெறும் பணம்தான் முக்கியமென்றால் மனிதன் எப்போதுதான் உண்மையிலேயே மனிதாபிமானமுள்ள மனிதனாய் மாறப்போகிறான். இன்னும் எத்தனை சுருதியை பலிகொடுத்து பாடம் கற்கப்போகிறோம். ஒரு அழகான குழந்தை அந்த அவலச்சனமான பேருந்தில் உட்காரும் இடத்தில் ஒரு ஓட்டை வழியாக விழுந்து இறக்கும் கொடுமை இன்னும் எவ்வளவு காலம் தான் சகித்துக்கொள்ளமுடியும். கும்பகோணம் தீ விபத்தில் 90 குழந்தைகளை தீக்கு பலிகொடுத்துவிட்டு இப்போது அலட்சியம் காரணமாக சுருதி என்னும் குழந்தையை கொன்றாகிவிட்டது.இதற்கு யார் காரணம்? யார் இதற்கு பொறுப்பேற்பது?பணமே பிரதானம் என்று நினைத்த அந்த பள்ளி நிர்வாகமா? பேருந்தின் சொந்தகாரரா? பேருந்தை இயக்கியவரா? பேருந்தை பராமரித்தவரா? இல்லை அந்த சம்பவம் நடந்த பதினைந்து நாள் முன்பு அந்த வண்டியை தரமுள்ளது என்று வாக்களித்த பிரேக் இன்ஸ்பெக்டரா? அந்த குழந்தை கற்கவந்த பாவத்திற்காக அதன் உயிரை வாங்கியாகிவிட்டது. இவர்கள் இப்போது நிம்மதியாக தான் உண்டு தனக்கான சம்பாத்தியம் உண்டு தான் குடும்பமுண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழப்போகிறார்களா?.

மனசாட்சியை கொன்று சொத்து சேர்ப்பதுதான் வாழ்கையின் லட்சியமா? போதும் ஒவ்வரு உயிர் போனபின்பு பாடம் கற்று என்ன பயன்?. செய்வதைகூட சரியாக செய்யாமல் சின்ன பிள்ளைகள் செல்லும் பேருந்தில் இவ்வளவு கேவலமாக வைத்திருந்த அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஒவ்வருவரும் சட்டத்தின் பிடியில் தப்பிக்கவிடக்கூடாது. அப்போதுதான் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக