செவ்வாய், பிப்ரவரி 21, 2012

தியானத்தின் உண்மை நிலை நிம்மதி அடைதல்...

ஈஷா தியான மையத்தின் சிவராத்திரி விழா நேற்று (20-02-2012) அன்று தொடங்கி மறுநாள் காலை 6.00 மணி அளவில் முடிவடைந்தது. ஈஷா தியான மையத்தின் சிறப்பம்சம் தியானலிங்கம் என்பது. ஏழு அடுக்குகளை கொண்ட தியான லிங்கம் நமது உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களை குறிக்கும். தியானம் என்பது தன்னில் இருந்து தன்னை பிரிப்பது. உடம்பில் இருந்து உயிரை அறிவது. பிறப்புக்கு முன் மற்றும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை  என்ன? என்பதை அறிய முயல்வது. பொதுவாய் நான் யார் என்று கேட்டால்? நான் இன்னாருடைய மகன் அல்லது மகள். இங்கு வசிக்கிறேன், இந்திந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வதோடு நான் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீ யார் என்பதை கேட்கும்போது நமது பெயரை கூரினால் அப்போது அந்த பெயர் உயிருக்கு சொந்தமானதா? உடலுக்கு சொந்தமானதா? என்ற கேள்வி எழுகிறது. நான் உடம்பு என்றால் அப்போது இறப்புக்கு பிறகு உயிர் எங்கே போகிறது. உயிர் இருக்கும்வரை மரியாதை கொடுத்த உலகம். உயிரற்ற உடலுக்கு ஒருமையில் பெயர் கூறுவது நாம் இந்த உடலல்ல என்பது புரியவைக்கிறது. பிறகு நான் யார் என்பதன் உண்மையான பொருளோ,  விளக்கமோ என்ன? இதை தேடித்தான் ரமண மகரிசி உண்மையை அடைய நினைத்தார் நான் யார்? என்ற கேள்வியை அவர் தனக்குள்ளேயே விதைத்தார். சரி இந்த உயிருக்குதான் பெயர் என்றால் உயிரை யாரும் கண்ணார பார்த்ததில்லையே.  உடல் என்பது உயிரை போர்த்திய சட்டை. உயிர் என்பது ஐம்பூதங்களின் சங்கமம் (காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி) என்பதின் அடக்கம்.

ஒரு மனிதன் தன்னை உணர்ந்தால்தான் பிறரை நேசிக்க முடியும். பிறருக்கு அன்பு காட்ட முடியும். பிறரை வாழவைக்க முடியும். அந்த உணர்தலின் அடிப்படை தான் தியானம் என்பது. தியானம் என்பது உணர்சிகளை அடக்குவது மட்டுமல்லை உண்மையான உணர்வுகளை கண்டுபிடிப்பது. நம்முள் இருக்கும் ( காம, குரோத, மோக,லோக,மத,மாச்சரியங்கள்) என்னும் ஆறு தீய குணங்களைவிட்டு ( அன்பு,அடக்கம்,பணிவு, பண்பு, பாசம், பரிவு) என்னும் ஆறினையும் பெறவே நாம் தியானிக்கிறோம். தியானம் என்பது உண்மையை கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சி. அதற்கு நாம் நம்மை அடகு வைப்பது என்பது பொருளல்ல அனுபவிப்பது என்பதே உண்மையான பொருள். உன்னுள்  இருக்கும் மகிழ்ச்சியை, ஆன்மாவை, உயிரை நீதான் அறிய முயற்சிக்கவேண்டும் அது  இன்னொருவரால் செய்யவைக்க முடியாது. தியானம் என்பது உடல் இயக்கமல்ல மன இயக்கம். உடல் தாண்டி வரும் பரவசநிலை என்பது தியானம் செய்தவர் மட்டுமே உணரவோ அனுபவிக்கவோ முடியும். அதை யாராலும் மற்றவருக்கு உணர்த்த முடியாது. அப்படி உணர்தினலோ, உணர்த்த முயற்சித்தாலோ அது உண்மையான தியானம் கிடையாது.


தியானம் என்பது கண்மூடி இருக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல மனம் திறந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மையான பொருள். மனம்தான் உடம்பின் இயக்கம், உணர்வின் வலிமை, அன்பின் அடையாளம். உண்மை என்பது உணர்வதில் இருக்கிறதே தவிர மற்றவர்  உளறுவதில் இல்லை. யார் என்ன சொன்னாலும் நீயாக எதை உண்மை என்று  உணருகிறாயோ அதை நம்பு அதுவே தியானம் என்பது. உன்னை நீயே  இயற்கையிடமோ, கடவுளிடமோ  ஒப்படைப்பதுதான்  தியானம் என்பது. உண்மையான தியானம் என்பது உண்மையை உணர்வதில் இருக்கிறது. தியானம் என்பது முடிவில்லாத ஆனந்தம் என்பது பொருள். நாம் பூமியில் பிறந்ததே ஒரு முடிவில்லாத ஆனந்தத்தை உணரவே தவிர குழப்பத்தில் வாழ்வதல்ல.

தியானம் என்பது எந்த உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது என்பதாகும். பல உயிரை வதைத்து ஒரு ராஜ்ஜியம் ஆள்வதில் என்ன பெருமை இருக்க முடியும். "சாம்ராட் அசோகன்" என்னும் மா மன்னன் பலரது உயிரை குடித்து ஒரு பெரிய தேசத்தை உருவாகினான் அப்போது கிடைக்காத பெருமையும், புகழும், நிம்மதியும் எல்லாம் விட்டு "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" என்ற மந்திரம் உச்சரிக்கும் ஒரு புத்த துறவியாக மாறிய பிறகே உலகம் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டது. எல்லாம் இருந்தபோது அசோகனுக்கு நிம்மதி மட்டும் அவரிடத்தில் இல்லை. எல்லாம் விட்டு துறவறம் மேற்கொண்ட பொது நிம்மது தவிர அவரிடம் வேறொன்றும் இல்லை. எல்லாம் வேண்டும் என்பது நிம்மதியை தராது. எல்லாம் இருந்தாலும் எனக்கு எதுவும் வேண்டாம் என்பதுதான் உண்மையான நிம்மதியை தரும் அதுவே உண்மையான  தியானம் என்பது.  

தியானத்தின் உண்மை நிலை நிம்மதி அடைதல்.

1 கருத்து:

  1. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
    தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
    குருவை நேரில் சந்தியுங்கள்,
    உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
    இருக்கும் கர்ம வினைகளை தவம் செய்து அழியுங்கள்.
    மேலும் அறிய இங்கே சொடுக்கவும்

    பதிலளிநீக்கு